உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. தொடர்ந்த மற்றொரு வழக்கும் தள்ளுபடி

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. தொடர்ந்த மற்றொரு வழக்கையும் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. தொடர்ந்த மற்றொரு வழக்கும் தள்ளுபடி
Published on

சென்னை.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் திரும்ப பெறப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில், மேலும் ஒரு வழக்கு அதேபோல தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்

அ.தி.மு.க. வக்கீல்கள் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்கு ஏற்கனவே தேர்தல் நடந்துமுடிந்துள்ள ஊரக பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

அபராதம்

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் பணியை இந்த ஐகோர்ட்டு செய்ய முடியாது. தேர்தலில் யாரை எங்கு பணி அமர்த்த வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய முடியுமே தவிர, அந்த அமைப்புக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது.

எனவே, இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை திரும்பப்பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதித்து அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com