

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
எடப்பாடி பழனிசாமியை துடைத்தெறிய வேண்டும் என்று ஸ்டாலின் பேசியுள்ளார். வீட்டை துடைப்பது போல கட்சியை நினைத்துக்கொண்டார்.
அதிமுக 2 கோடி தொண்டர்களைக் கொண்ட கட்சி. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை முடக்கலாம் என்று சதி செய்தீர்கள். அத்தனை திட்டத்தையும் நாம் முறியடித்தோம். எத்தனை வழக்குகள்... இப்போது அந்த பி-டீம் எங்கே போய்விட்டது என்று பார்த்தீர்கள் அல்லவா... குப்பைக்குப் போய்விட்டது.
அவருக்கு என்ன அடையாளம் கொடுத்தோம்? எவ்வளவு பெரிய பொறுப்பை ஜெயலலிதா கொடுத்தார். அதையெல்லாம் மறந்து எட்டப்பன் போல துரோகியாகிவிட்டார். அப்படிப்பட்ட துரோகிகள் அதிமுகவில் இருந்து துடைத்தெறியப்பட்டார்கள். இப்போது அதிமுக புனிதமாகிவிட்டது. அதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்கள் அனைவரும் ஆண்டவனின் அருளால் துடைத்தெறியப்பட்டனர். அதிமுக ஜெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது” என்றார்.