கருப்பு மாஸ்க் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வருகை..!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு இன்று கருப்பு மாஸ்க் அணிந்து வந்தனர்.
கருப்பு மாஸ்க் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வருகை..!
Published on

சென்னை,

நேற்றைய சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விருத்தாசலம் சிறுமி பாலியல் சம்பவம் தொடர்பாக அரசின் கவனத்தை எதிர்த்து பேசினார். அவரின் இந்த பேச்சு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என அ.தி.மு.க. கொறடா எஸ்.பி. வேலுமணி சட்டசபையில் பேசினார்.

அப்போது அவர், பிரதான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தொடர்ந்து நேரலையில் (நேரடி ஒளிபரப்பு) காட்டப்படுவதில்லை என்றார். இதற்கு சபாநாயகர், 'இது தொடர்பாக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்னிடம் கூறியிருக்கிறார், நான் செயலாளரிடம் அது குறித்து விசாரிக்க சொல்லி இருக்கிறேன்' என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய எஸ்.பி.வேலுமணி, எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு நேரலையில் தடை செய்யப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார். அதன் பின்னர் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்யாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று கருப்பு மாஸ்க் அணிந்து வந்துள்ளனர். சட்டப்பேரவையின் நேரலையில் எதிர்க்கட்சிகளை இருட்டடிப்பு செய்வதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com