2026-ல் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி


2026-ல் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 14 July 2025 10:19 AM IST (Updated: 14 July 2025 11:30 AM IST)
t-max-icont-min-icon

உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்தி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

சேலம்,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் கடந்த 7-ந்தேதி முதல் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி கோவை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 33 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டினார். இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி வரை 7 மாவட்டங்களில் உள்ள 36 சட்டமன்ற தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.

இந்தநிலையில், சேலத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

எனது சுற்றுப்பயணத்தில் மக்கள் மத்தியில் எழுச்சி இருப்பதை காண முடிகிறது. திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்கள் உள்ளனர். தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளன. அப்போது மேலும் சில கட்சிகள் அதிமுக அணிக்கு வரும்.உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முதல்-அமைச்சர் நாடகம் நடத்தி வருகிறார். மக்களின் செல்போன் எண்களை பெறுவதற்காக திட்டத்தை ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. திமுகவால் மக்களுக்கு நன்மை இல்லை. திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கு கொடுத்த இழப்பீடு ஏற்புடையதல்ல என செய்தி வெளியாகி உள்ளது. 2024-ம் ஆண்டு சங்கரன்கோவிலில் காவலில் இறந்த முருகனின் மனைவி மீனாவிற்கு இழப்பீடு இல்லை.

அரசு வேலை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டும் திமுக அரசு தரவில்லை என செய்திகளில் கூறப்படுகிறது. லாக்கப் மரணங்களை தடுக்க முடியவில்லை. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு தர மனமில்லை. மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி? 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும். அதிமுக கூட்டணி வலிமையாக, ஒற்றுமையாக உள்ளது. தேர்தல் நேரத்தில் பலம் பொருந்திய கூட்டணியாக அதிமுக கூட்டணி அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா திரும்பத் திரும்ப கூறிவரும் நிலையில் பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

1 More update

Next Story