தமிழ்நாட்டின் உரிமையை அதிமுக விட்டுக்கொடுக்காது: ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஒரு மொழியை திணித்துதான் நிதி கொடுப்பேன் என்று சொன்னால் எப்படி?. அண்ணா, எம்.ஜி.ஆர். சொன்னதும் இருமொழி கொள்கைதான். தமிழ்நாட்டில் என்றைக்கும் இருமொழிக் கொள்கைதான். தமிழ்நாட்டின் உரிமையை என்றும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்தி திணிப்பை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. மத்திய அரசுமொழியை திணித்தால் மத்திய அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும் என மக்கள் யோசிப்பார்கள்.
புயல் பாதிப்புக்கு நிதி கேட்டால், பத்தில் ஒருபங்கு மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. மற்ற மாநிலத்துக்கு தரப்படும் நிதி பட்டியலை மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட வேண்டும். திமுக எம்.பி.க்கள் அனைவரும் பேசி தமிழ்நாட்டிற்கான நிதியை வாங்கி இருக்கலாம். ஓ.பன்னீர்செல்வம் ஒரு கொசு; கொசு பிரச்சினையைவிட பேச வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன.
தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது காட்டாட்சி நடக்கிறது. 2026ம் ஆண்டுக்கு பின் பாஜகவோடு திமுக கூட்டணி வைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. திமுகவின் பாஜக எதிர்ப்பு, 'அடிப்பதுபோல அடிக்கிறேன்; அழுவது போல அழு' என இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.






