

விருதுநகர்,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 10 அறிவிப்புகள் 2 கட்டங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
அதில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,200-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும், மாணவர்களுக்கான கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தி.மு.க. ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களை அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அப்படியே நகலெடுத்துள்ளதாக பரவலாக கருத்துகள் எழுந்துள்ளன. தி.மு.க.வை சாராத மற்ற கட்சியினர் கூட, தி.மு.க. ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களைத்தான் அ.தி.மு.க. அறிவித்துள்ளது என்று கூறுகின்றனர். அ.தி.மு.க.வால் தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே கொடுக்க முடியும். ஆனால் அவற்றை நிறைவேற்றுவது தி.மு.க.தான்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.