

சென்னை,
தமிழகத்தில் அடுத்த மாதம் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) மாலை சென்னை மயிலாப்பூரில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுவார் என்று தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் அவர்தான் வேட்பாளர் போல் கைகூப்பியபடி நின்றார். இந்த நிலையில், அ.தி.மு.க. தொண்டர்களில் ஒருவர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் அறைக்கு வெளியே இருக்கும் பெயர் பலகையைப்போல், "எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சர்" என்று அச்சிடப்பட்ட பலகையை கையில் ஏந்தியபடி வந்திருந்தார். இது அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களை வெகுவாக கவர்ந்தது.