அஜித்குமார் மரணம்; 4-வது நாளாக காவல் நிலையத்தில் விசாரணையை தொடங்கினார் நீதிபதி

3 நாட்களாக வழக்கு தொடர்பாக பெறப்பட்ட ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
அஜித்குமார் மரணம்; 4-வது நாளாக காவல் நிலையத்தில் விசாரணையை தொடங்கினார் நீதிபதி
Published on

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த இளைஞர் அஜித்குமார் (வயது 27). தனது காரில் இருந்த நகைகள் மாயம் என மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த நிகிதா என்பவர் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் விசாரிப்பதற்காக அவரை அழைத்து சென்றனர். அப்போது, அவர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் பலியானார்.

தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. நீதி விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புகார் அளித்த நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர் தலைமறைவாகி விட்டார் என்றும் கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களாக அஜித்குமார் மரணம் பற்றி நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தினார்.

இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் 4-வது நாளாக காவல் நிலையத்திற்கு நேரில் சென்று நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணையை தொடங்கியுள்ளார். சம்பவத்தின்போது பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகளிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களாக வழக்கு தொடர்பாக பெறப்பட்ட ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com