

சேலம்,
சேலத்தில் நடைபெற்ற அகில இந்திய நாய் கண்காட்சியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட நாய் வகைகள் பங்கேற்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
சேலம் மாநகரில் அகில இந்திய அளவிலான நாய் கண்காட்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாய் வளர்ப்போர் தங்களது செல்ல பிராணிகளுடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்ட், ராட்வீலர், டாபர்மேன், லேப்ரடார், கோல்டன் ரெட்ரீவர், பக் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட நாய்கள் அணிவகுத்து நின்றன. மேலும், நம் நாட்டுக்கே பெருமை சேர்க்கும் சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் போன்ற பாரம்பரிய நாட்டு நாய் வகைகளும் கம்பீரமாக இடம்பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
கண்காட்சியில் பங்கேற்ற நாய்களின் சுறுசுறுப்பு, கீழ்ப்படிதல், அதன் உடலமைப்பு மற்றும் ஓட்டப்பந்தயம் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த நாய்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. வண்ண வண்ண உடைகளுடனும், விதவிதமான சிகை அலங்காரங்களுடனும் வலம் வந்த நாய்களை காண சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் நாய் பிரியர்கள் கண்காட்சிக்கு திரண்டு வந்தனர்.