பாடப் புத்தகங்கள் அனைத்தும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விரும்பி படிக்கும் புத்தகமாக மாற்றப்படும்

பாடப் புத்தகங்கள் அனைத்தும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் படிக்கும் புத்தகமாக மாற்றப்படும் என்று பாடநூல் நிறுவன தலைவர் திண்டுக்கல் லியோனி கூறினார்.
பாடப் புத்தகங்கள் அனைத்தும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விரும்பி படிக்கும் புத்தகமாக மாற்றப்படும்
Published on

சென்னை,

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு திண்டுக்கல் லியோனி அளித்த பேட்டி வருமாறு:-

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக என்னை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து இருக்கிறார். 33 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த எனக்கு இந்த பதவியை வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒன்றிய அரசு

மக்களுக்கான பாடத் திட்டத்தை பாடநூல் கழகத்தின் மூலம் உருவாக்கி, கல்வியை சுமையாக நினைக்காமல், பாடப்புத்தகங்களை மகிழ்ச்சி அளிக்கும் புத்தகமாக மாற்றி, சாதாரண குழந்தைகள் அதை விரும்பிப் படிப்பது போல மாற்றி அமைக்க வேண்டும். இதில் பல புதுமைகளைப் படைப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். தொலைக்காட்சி செய்திகளிலும் ஒன்றிய அரசு என்றுதான் செய்தி வாசிக்கப்படுகிறது. எனவே பாடத் திட்டங்களிலும் மத்திய அரசு என்ற பகுதியை மாற்றி, அடுத்த பருவத்திற்கான புத்தகங்களை அச்சிடும்போது ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தி அதை நடைமுறைக்குக் கொண்டு வர பாடநூல் நிறுவனம் முழுமையாக பாடுபடும்.

பிரதமர் விமர்சனம்

நான் பெண்களை இழிவாகப் பேசியதாக பிரதமர் உள்பட என்னை மேடைகளில் விமர்சித்தனர். அந்தக் கருத்து நான் பலமுறை தொலைக்காட்சிகளில் பேசிய கருத்துதான்.

ஆனால் அதில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து, ஏதோ நான் இடுப்பு பற்றி பேசியதாகவும், பெண்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்தியது போலவும் ஒரு போலி குற்றச்சாட்டைக் கூறி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

அன்புமணிக்கு பதில்

பாடநூல் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில், பா.ம.க.வின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் பேசியதையும், அவர் பயன்படுத்திய வார்த்தைகளை பார்க்கும்போதும், முன்னாள் முதல்-அமைச்சரை டயர் நக்கி என்று அவர் கூறியதை சுட்டிக்காட்ட வேண்டும்.

அந்த வார்த்தையைவிட பெரிய அளவில் பெண்களை அவமதிக்கும்படி நான் பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com