

அரசு பணியிடங்களில் 1 சதவீத இடஒதுக்கீடு கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், காதுகேளாதோர், வாய்பேசாதோர் உரிமைகளுக்கான கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ரமேஷ்பாபு, பொருளாளர் சத்யா ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
இதில் கலந்து கொண்டவர்கள் காதுகேளாதோர், வாய்பேசாதோர் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் சைகை மொழி பெயர்ப்பாளரை உடனடியாக நியமிக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் காதுகேளாத, வாய்பேசாத மாற்றுத் திறனாளிகள் தொகுப்பு ஊதியத்தில் வேலை பார்ப்பவர்களை அரசாணை எண் 151-ன் படி உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு பணிகளில் காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கு 1 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக வழங்க வேண்டும்.
தனியார் துறை நிறுவனங்களில் காதுகேளாதோர், வாய் பேசாதோர் அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி பணி அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காதுகேளாத, வாய் பேசாத மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு இலவச வீட்டுமனை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.