வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்கள் புதிய மருத்துவ கல்லூரிகளில் பயிற்சி மருத்துவம் பெற அனுமதி வழங்குக: இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை

அரசு மருத்துவ கல்லூரிகளில் 20 சதவீதம் இடங்களை கூடுதலாக உருவாக்கி வெளிநாட்டில் படித்த மருத்துவ பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கோரியுள்ளது.
வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்கள் புதிய மருத்துவ கல்லூரிகளில் பயிற்சி மருத்துவம் பெற அனுமதி வழங்குக: இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை
Published on

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 சதவீதம் அளவிற்கான இடங்களை கூடுதலாக உருவாக்கி, வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவ பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவ பட்டதாரிகளுக்கு பயிற்சி மருத்துவராக பயிற்சி பெற அனுமதி வழங்கிட வேண்டும்.

இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.  வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு, பயிற்சி மருத்துவம் பெற தமிழ்நாட்டில் துவங்கப்பட்டுள்ள 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் மீண்டும் அனுமதி வழங்கிட வேண்டும்.

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு தற்காலிக தகுதி சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளிலும் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் காலதாமதம் செய்கிறது.  இத்தகைய மருத்துவர் மாணவர் விரோத அலட்சிய போக்கை தமிழ்நாடு மருத்துவ கவுன்வில் கைவிட வேண்டும்.

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களில் பலருக்கு 2 அல்லது 3 ஆண்டுகள் பயிற்சி மருத்துவராக பயிற்சி பெற வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணைய உத்தரவுக்கு எதிராகவும் மற்ற மாநிலங்களில் இல்லாத உத்தரவுகளை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வழங்குவதை உடனடியாக கைவிட வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிடாத வகையில் இப்பட்டதாரிகளிடம் ஒரு கட்டாய உத்தரவாத படிவத்தில் வற்புறுத்தி கையொப்பம் பெறும் போக்கு உள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். அந்த படிவத்தில் உள்ள நிபந்தனைகளை மாணவர்கள் படித்திடவும் அனுமதிப்பதில்லை என தெரிவிக்கின்றனர். இந்த போக்கை கைவிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களாக பயிற்சி பெறும், வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு விடுதி வசதிகளை வழங்கிட வேண்டும்.  தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்கிடவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

வெளிநாட்டில் மருத்துவம் பயிலும் மாணாக்கர்களுக்கு உதவிட, தேசிய அளவிலும் மாநில அளவிலும் உதவி மையங்களை உருவாக்கிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, மத்திய அரசையும் மாநில அரசையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com