

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட காப்பீட்டு நிறுவனங்கள் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் கட்டாயம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். மத்திய கூட்டுறவுத் துறையின் கீழ் பதிவு செய்த கூட்டுறவு சங்கங்கள் காப்பீடு நிறுவனங்களாக செயல்பட மத்திய அரசால் இதுநாள் வரை ஒப்புதல் வழங்கப்படுவதில்லை.
ஆனால் தற்போது பாரதிய கூட்டுறவு பொது காப்பீடு நிறுவனம் சார்பில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் செயல்பட 829 பயிர் காப்பீடு உதவியாளர் பணியிடத்துக்கு பணித்தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், இதற்கு தகுதியானவர்கள் ரூ.250 விண்ணப்பத் தொகை செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் தவறான தகவல் பரவி வருகிறது. மத்திய அரசின் ஒப்புதல் பெறாத, பயிர் காப்பீடு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக செயல்படும், இந்த பயிர் காப்பீடு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.