ஊரடங்கிலும் செயல்படுகிறது; ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விளை பொருட்களை பாதுகாக்கலாம்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கிலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் விளை பொருட்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கிலும் செயல்படுகிறது; ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விளை பொருட்களை பாதுகாக்கலாம்; தமிழக அரசு அறிவிப்பு
Published on

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரானாவினால் ஏற்பட்ட 2-வது அலை தாக்குதலை கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை விற்பனைக்கு எடுத்துச்செல்வதில் உள்ள பிரச்சினைகளை களைந்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் ஊரடங்கு காலத்திலும் செயல்பட்டு வருகின்றன. எனவே விவசாயிகள் கீழ்க்கண்ட வசதிகளை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொருளீட்டு கடன்

மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நவீன சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை பயன்பாட்டில் இருந்து வருகின்றன. விவசாயிகள் விளைபொருட்களை இக்கிடங்குகளில் 180 நாட்கள் வரை வைத்து பாதுகாத்திடலாம். அதிகவிலை கிடைக்கப்பெறும் காலங்களில் விளைபொருட்களை கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்திடலாம்.கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களை விவசாயிகள் அடமானத்தின் பேரில் அதிகபட்சம் 75 சதவீத சந்தை மதிப்பு அல்லது ரூ.3 லட்சம் இவற்றில் எதுகுறைவோ அந்த அளவிற்கு பொருளீட்டுக் கடனாக பெற்றிடலாம். கடனிற்கான காலஅளவு 180 நாட்கள் ஆகும். இதற்கான வட்டி 5 சதவீதமாகும்.

குளிர்சாதன கிடங்கு வசதிகள்

பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடி செய்திடும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் குளிர்சாதனக்கிடங்கு வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. விரைவில் அழுகக்கூடிய பொருட்களை இக்கிடங்குகளில் வைத்து பாதுகாத்திடலாம். மேலும் வினியோகத் தொடர் மேலாண்மை திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களிலும் குளிர்சாதனக் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் இதனை பயன்படுத்தி விளைபொருட்களை பாதுகாத்திடலாம். விவசாயிகள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்திட மாநில அளவில் 044-22253884 என்ற தொலைபேசியை தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com