பழைய மாணவர்கள் சந்திப்பு

பேட்டை ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
பழைய மாணவர்கள் சந்திப்பு
Published on

பேட்டை:

பேட்டை ம.தி.தா இந்து கல்லூரியில் 1995 முதல் 1998-ம் ஆண்டு வரை பயின்ற பழைய மாணவர்களின் 25-வது ஆண்டு விழா மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், முன்னாள் மாணவர் சங்கச் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் நீலகிருஷ்ணபாபு, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் சிதம்பரநாதன், சிவசங்கரன், சிவசுப்பிரமணியன், ஆதிவராகமூர்த்தி, சிவராமகிருஷ்ணன், முத்துராஜ், ராஜூ மற்றும் செல்லப்பா, சுந்தரம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

கல்லூரியின் முன்னாள் மாணவர்களான நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 1995 முதல் 1998 வரை பயின்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த பழைய மாணவர்கள் 200 பேர் கலந்து கொண்டு தங்கள் கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மேயர் பி.எம்.சரவணன் பேசுகையில், கல்லூரிக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புரொஜெக்டர் ஒன்றை வாங்கித் தருவதாக அறிவித்தார். மேலும் பேராசிரியர் நீலகிருஷ்ணபாபு வைத்த கோரிக்கையை ஏற்று கல்லூரி பஸ் நிறுத்தத்தில் இருந்து கல்லூரி வாயில் வரை உள்ள பிரதான சாலைக்கு இந்து கல்லூரியின் தலைவர் மற்றும் செயலாளராக 25 ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் மாநகராட்சி மேயரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.எல்.சுப்பிரமணியன் நினைவாக மேயர் ஏ.எல்.எஸ். சாலை என பெயரிடப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் உறுதியளித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com