

சென்னை,
அம்பேத்கரின் எழுத்துகள், பேச்சுகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை தொகுத்து முனைவர் கவுதம சன்னா வழங்கியுள்ள ‘அம்பேத்கரியம்’ நூல்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.2.2026) தலைமைச் செயலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் கவுதம சன்னா, அண்ணல் அம்பேத்கரின் எழுத்துகள் பேச்சுகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை தொகுத்து வழங்கியுள்ள ‘அம்பேத்கரியம்’ நூல்களை அறிமுகப்படுத்தினார். இத்தொகுப்பில் 50 நூல்கள் இடம் பெற்றுள்ளன.
அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளும் படைப்புகளும் கால வரிசைப் படியும், அவரின் சிந்தனை முறைமை படியும் தொகுக்கப்படாமல் இருந்த நிலையில், முனைவர் கவுதம சன்னா ‘அம்பேத்கரியம்’ என்ற பொதுத் தலைப்பின் கீழ் காலவரிசைப்படி 50 தொகுதிகளாக தொகுத்துள்ளார்.
இத்தொகுப்பு ‘அம்பேத்கரியம்’ என்ற கருப்பொருளில் அண்ணல் அம்பேத்கரின் அனைத்து ஆவணங்களும் முறையாக தமிழில் தொகுக்கப்பட்ட முதல் முயற்சியாகும். அண்ணல் அம்பேத்கரின் எழுத்துகள் பேச்சுகள் மற்றும் ஆவணங்கள் ஆகியன முறையாக தொகுக்கப்பட்டு இவற்றில் இடம் பெற்றுள்ளன. இத்தொகுப்பு முதன் முறையாக தமிழில் வெளிவருவது சிறப்பம்சமாகும்.
அதுமட்டுமின்றி, அண்ணல் அம்பேத்கர் எழுதி நூலாக வெளிவராத "ஒதுக்கப்பட்ட மக்கள்" மற்றும் அவரின் கடிதங்கள் முதல்முறையாக நூலாக்கம் பெற்று இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
மொத்தம் சுமார் 23,000 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்பு 30.1.2026 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் எழும்பூர் சென்னை அருங்காட்சியக அரங்கில் வெளியிடப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, ஜெர்மனி தலைவர் முனைவர் க.சுபாஷிணி, செந்தில்குமார், மருத்துவர் பாலகுமாரன், மாணிக் ராஜேந்திரன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.