இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் படேலின் மறு உருவம் அமித்ஷா - ஆர்.பி. உதயகுமார் புகழாரம்

நேற்று முன்தினம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் படேலின் மறு உருவம் அமித்ஷா - ஆர்.பி. உதயகுமார் புகழாரம்
Published on

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவமாக உள்துறை மந்திரி அமித்ஷா பார்க்கப்படுகிறார் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் டெல்லி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து 2 மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை எடப்பாடி பழனிசாமி மறுத்தார்.

செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை, தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக பேசினேன்" என்று தெரிவித்தார். இந்த நிலையில், கட்சிக் கூட்டத்தில் அமித்ஷாவை புகழ்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவமாக பார்க்கப்படும் உள்துறை மந்திரி அமித்ஷாவை, தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, இரண்டு மணிநேரத்துக்கு மேலாக பேசியிருப்பது பற்றி பல கருத்துகள் எழுந்துள்ளன. ஆனால், தமிழகத்தின் நலனுக்காக அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.

இருமொழிக் கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் சந்திப்பின் காரணம் என்ன என்பதை திண்ணை பிரசாரம் மூலமாக அ.தி.மு.க.வினர் எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com