

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த 'புனித பீட்டர் பால்' என்கிற கடல் உணவு பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
இந்த விபத்தில் அங்கு பணியாற்றி வந்த வடமாநில பெண் தொழிலாளர்கள் உள்பட 74 பேர் மயக்கம டைந்தனர். இதையடுத்து அவர்கள் 2 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 16 பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவை சேர்ந்த அஞ்சனா ஜூவாங்கா (25) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் சில தொழிலாளர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.