பாறையை உடைத்து கடத்த முயற்சி; 4 பேர் மீது வழக்கு

திருவட்டார் அருகே பாறையை உடைத்து கடத்த முயற்சி; 4 பேர் மீது வழக்கு
பாறையை உடைத்து கடத்த முயற்சி; 4 பேர் மீது வழக்கு
Published on

திருவட்டார், 

திருவட்டார் அருகே குமரன்குடி கிராமத்துக்குட்பட்ட புல்லுவிளை பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் பாறைகளை உடைத்து சிலர் கடத்தப் போவதாக கன்னியாகுமரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

உடனே புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் தங்க முனியசாமி, உதவி இயக்குனர் சுரேஷ் குமார், மதுரை மண்டல புவியியல் துறை பறக்கும்படை அதிகாரிகள் நாகராஜன், அரவிந்த், திருவட்டார் வட்ட வருவாய் அதிகாரி அமுதா, கிராம நிர்வாக அதிகாரி மகேஸ்வரி ஆகியோர் அங்கு விரைந்தனர்.

அப்போது அதிகாரிகளை கண்டதும் கும்பல் தப்பி ஓடி விட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்த பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் எந்திரம் மற்றும் டெம்போவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் பாறை உடைத்த இடத்தின் உரிமையாளர் அகஸ்தீஸ்வரம் மரிய பிரான்சிஸ், இடத்தின் பராமரிப்பாளர் பூவன்கோடு சுனில்ராஜ், டெம்போ டிரைவர் அஜின், எந்திர உரிமையாளர் காரியங்கோணம் ஜெனித் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com