

ஓசூர்:
ஓசூர் விநாயகர் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது எலக்ட்ரிக் பேட்டரி ஸ்கூட்டரை, இன்று சதாசிவம் என்ற நண்பர், தனது பிள்ளைகளை ஓசூர் பஸ்தி அருகே பாரதியார் நகரில் உள்ள அரசுப்பள்ளியில் விட்டு வர எடுத்துச் சென்றார்.
அப்போது வழியில், ஸ்கூட்டரின் பின் பகுதியில் புகை வருவதாக பொதுமக்கள் எச்சரித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சதாசிவம், திடீரென வண்டியை நிறுத்தி, குழந்தைகளுடன் அங்கிருந்து ஓடினார்.
இந்நிலையில் அந்த இ-பேட்டரி ஸ்கூட்டரில் திடீரென புகை கிளம்பி தீப்பற்றி எரிந்து, முற்றிலும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக சதாசிவம் மற்றும் 2 குழந்தைகளும் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், தொடர்ந்து தீ பிடித்து எரியும் சம்பவங்களால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது ஓசூரில் நடந்த 2-வது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.