இனி என் பெயர், படத்தை பயன்படுத்த அன்புமணிக்கு உரிமை இல்லை - ராமதாஸ் ஆவேசம்

கட்சி எனக்கு இல்லை என்று சொல்வதற்கு ஒரு பிள்ளை என டாக்டர் ராமதாஸ் சாடினார்.
இனி என் பெயர், படத்தை பயன்படுத்த அன்புமணிக்கு உரிமை இல்லை - ராமதாஸ் ஆவேசம்
Published on

சென்னை,

பா.ம.க. தலைவர் பதவி தொடர்பாக டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகன் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. இருதரப்பில் இருந்தும் இதுதொடர்பாக தேர்தல் கமிஷனில் முறையிட்டு வந்தனர். பல கடிதங்கள் அளிக்கப்பட்டன.

இந்தநிலையில் தேர்தல் கமிஷன் அன்புமணி ராமதாஸ்தான் தலைவர் என்று கூறிவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி மினி புஷ்கர்னா விசாரித்தார். அப்போது தேர்தல் கமிஷனுக்கு எதிரான டாக்டர் ராமதாசின் மனுவை முடித்து வைத்ததுடன், உரிமையியல் கோர்ட்டை நாடலாம் என்றும் டெல்லி ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட ஆவணத்தில் எனது கையெழுத்தை போலியாக போடப்பட்டுள்ளனர். 46 ஆண்டுகளாக உழைத்தவரை அசிங்கமாக பேசுவதா?. கண் தெரியவில்லை, காது கேட்கவில்லை என்று கூறுவதா?. என்னை பற்றி பேச அன்புமணிக்கு எந்த உரிமையும் கிடையாது. கட்சி எனக்கு இல்லை என்று சொல்வதற்கு ஒரு பிள்ளை.

இனி என் பெயர், படத்தை அன்புமணி பயன்படுத்தக்கூடாது; அதற்கு அவருக்கு உரிமை இல்லை. வேண்டுமென்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக்கொள்ளட்டும். நான் உருவாக்கிய பாமகவை அன்புமணி உள்ளிட்ட யாரும் உரிமை கொண்டாட முடியாது. நான் தான் பாமகவிற்கு நிறுவனர், தலைவர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com