

அந்தியூர்,
அந்தியூர் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற திருச்சி வாலிபர்கள் 2 பேரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் தாமரைக்கரை அருகே உள்ளது ஈரட்டி பீட். இதன் கட்டுப்பாட்டில் உள்ள ஒந்தனை வனப்பகுதியை ஒட்டி, ஈரண்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் விலை உயர்ந்த சந்தன மரம் ஒன்று இருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை வேளையில் மர்ம நபர்கள் இருவர் அந்தத் தோட்டத்திற்குள் புகுந்து, ரகசியமாக ரம்பத்தால் சந்தன மரத்தை அறுத்து கொண்டிருந்தனர். மரத்தை அறுக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயி ஈரண்ணன், உடனடியாக அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.
அங்கு திரண்ட பொதுமக்கள், தப்பியோட முயன்ற 2 பேரையும் நாலாபுறமும் சூழ்ந்து கையும் களவுமாக பிடித்து வைத்தனர். இதுகுறித்து அந்தியூர் வனத்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், வனவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பிடிபட்ட இருவரையும் மீட்டு தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா நெட்ட வேளாம்பட்டியை சேர்ந்த மருதை என்பவருடைய மகன் செந்தில்குமார் (வயது 35), முசிறி தாலுகா சாலக்காடு அய்யனார் கோவிலை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருடைய மகன் லோகநாதன் (27). இவர்கள் இருவரும் குருநாதசாமி கோவில் திருவிழாவிற்கு வந்துள்ளனர். பின்னர், பர்கூர் வனப்பகுதிக்குள் சென்று 2 நாட்கள் தங்கியிருந்து, கடத்தும் நோக்கில் சந்தன மரத்தை வெட்டியதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, அவர்கள் வெட்டி வைத்திருந்த சுமார் 75 கிலோ எடை கொண்ட 5 அடி நீள சந்தன மரம், மரம் அறுக்கப் பயன்படுத்திய ரம்பம் மற்றும் கத்தி ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து, மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில், கைது செய்யப்பட்ட செந்தில்குமார் மற்றும் லோகநாதன் ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.