அண்ணா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை: முதல் நாளில் ஆன்லைன் மூலம் 7,420 பேர் பதிவு செய்தனர்

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முறை நேற்று தொடங்கியது. முதல் நாளில் 7,420 பேர் பதிவு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை: முதல் நாளில் ஆன்லைன் மூலம் 7,420 பேர் பதிவு செய்தனர்
Published on

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் இந்த ஆண்டு முதல் பொறியியல் சேர்க்கை ஆன்லைனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பி.இ., பி.டெக். படிப்பில் சேர்வதற்கு நேற்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யும் முறை தொடங்கியது. நேற்று காலை முதலே மாணவர்கள் தங்களின் வீடுகளில் இருந்தே விண்ணப்பத்தினை பதிவு செய்தனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்திற்கு காலை 8.30 மணி முதல் மாணவர்கள் வரத்தொடங்கினர். அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை பேராசிரியர்கள் அளித்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த கணினி மையங்களிலும் விண்ணப்பத்தினை பதிவு செய்தனர். ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து, அதற்கான கட்டணத்தை டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, நெட் பேங்கிங் வழியாக செலுத்தினர்.

தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தங்களின் பிளஸ்-2 வகுப்புத் தேர்வு எண்ணை பதிவு செய்ய வேண்டும். சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட பிற பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் தங்களின் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். அவர்கள் தேர்வு முடிவு வெளிவந்த பின்னர் அந்த மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்.

விளையாட்டு, சிறப்பு பிரிவு, தொழிற்கல்வி மாணவர்களும் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம். ஆனால் அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பதற்கும், கலந்தாய்விற்கும் சென்னை வரவேண்டும்.

மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் சேர்க்கை உதவி மையங்களிலும் மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர். மாணவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை பிரிவில் 044-22359901 முதல் 044-22359920 வரை உள்ள 20 தொலைபேசி எண்களிலும் தொடர்புகொள்ளலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களிலும் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கும் வசதி நேற்று அதிகாலை 12.05 மணிக்கு தொடங்கியது. 12.15 மணிக்கே ஒரு மாணவர் பதிவு செய்துள்ளார். மாணவர்களின் ஆர்வத்தை பார்க்கும்போது ஆன்லைன் கலந்தாய்வை அவர்கள் விரும்புவது தெரிகிறது. எந்த சூழ்நிலையிலும் ஆன்லைன் கலந்தாய்வு பாதிக்காது.

தமிழகத்தின் கடைக்கோடி கன்னியாகுமரியில் இருக்கும் மாணவர்களும் சென்னைக்கு வரவேண்டி இருந்தது. இந்த நிலையை மாற்றுவதற்காகத்தான் ஆன்லைன் கலந்தாய்வை அறிமுகம் செய்துள்ளோம். தமிழக பொறியியல் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகள், கல்லூரிகள் விவரங்களை வருகிற 15-ந் தேதிக்கு மேல் வெளியிட உள்ளோம். அதற்கான கையேடு அளிக்கப்படும். அதன் மூலம் மாணவர்கள் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வுசெய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறும்போது, முதல் நாளான நேற்று மாலை 6 மணி வரை 7,420 பேர் ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில் 42 உதவி மையங்கள் மூலம் 1,050 மாணவர்களும், வீடுகளில் இருந்து நேரடியாக 6,370 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். 30-ந் தேதி வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com