

பழனி,
உலக புகழ் பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. தேரோட்டத்தை காணவும், வடம் பிடித்து தேரை இழுக்கவும் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.
விநாயகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய சிறிய தேர்கள் இழுத்துச் செல்லப்பட்டன. அதைத்தொடர்ந்து பெரிய தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...! வீரவேல் முருகனுக்கு அரோகரா...!’ என்று பழனியே அதிரும்படி சரணகோஷம் எழுப்பினர்.
இந்த நிலையில், தைப்பூச திருவிழாவையொட்டி தமிழக பா.ஜனதா முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்ய பழனி வந்தார். திருஆவினன்குடி கோவிலில் காவடி எடுத்து வழிபட்ட அவர் படிப்பாதை வழியாக மலைக்கோவில் சென்று தரிசனம் செய்தார்.