

சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பகுதியில், 25 வயதான இளம்பெண் சிந்துஜா என்ற சகோதரியை, ஆபாசமாகப் பேசி, அடித்ததால், அவர் மனமுடைந்து, தற்கொலை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகம் முழுவதும், தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமாக, கூப்பன் வழங்கி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினர், தனக்கு கூப்பன் வழங்கப்படவில்லை என்று கேட்ட சகோதரி சிந்துஜா மீது, தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
திமுகவின் உண்மை முகம் இதுதான். எந்தக் காலத்திலும் வாக்களிக்கும் மக்கள் மீது, திமுகவினருக்கு மரியாதை கிடையாது. தேர்தல் முடியும் முன்னரே, பெண் என்றும் பாராமல் ஆபாச வார்த்தைகள் பேசி, தாக்குதல் நடத்தி, ஒரு உயிர் பறிபோகக் காரணமாக இருக்கும் இந்த ரவுடி கும்பல், தேர்தல் முடிந்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
வரும் தேர்தலில், இந்த திமுக அராஜக கும்பலை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.