எடப்பாடி பழனிசாமி மீது அண்ணாமலை விமர்சனம்: தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் - தமிழிசை

தலைவர்களுக்கு என்ன மரியாதை தர வேண்டுமோ.. அதை கொடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மீது அண்ணாமலை விமர்சனம்: தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் - தமிழிசை
Published on

சென்னை,

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருந்த நிலையில் பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னைப் பொறுத்தவரை, தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அதை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்கக் கூடாது. சகோதரி விஜயதரணி பதவி கிடைக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார், இது இயல்புதான். பாஜகவில் அனைவருக்கும் பதவி கிடைக்கும். சிறிது காலம் ஆகலாமே தவிர காலம் கடக்காது. அவர் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.

துரை முருகன் குறித்து பேசி தி.மு.க.வில் ஒரு புயலை உருவாக்கி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். பாவம் அண்ணன் துரை முருகன். கட்சியில் அவர் எவ்வளவு சீனியர். கட்சியில் கடுமையாக உழைத்த துரைமுருகன் உதயநிதிக்கு கீழ்படிந்து இருக்க வேண்டிய நிலை " என்று அவர் கூறினார்.

கூட்டணி குறித்த அண்ணாமலையின் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "மாநிலத் தலைவருக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆனால், அது மேடையில் மட்டும் முடிவு செய்வது இல்லை" என்று தமிழிசை பதில் அளித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com