அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன?

அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோரை அண்ணாமலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்
Published on

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி மொத்தமாக அள்ளி விட்டது. அவர்களை எதிர்த்து களம் கண்ட அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை.

கடந்த தேர்தலில் இணைந்து களம் கண்ட அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இந்த தேர்தல் தொடங்குவதற்கு முன்பு தனித்தனி பாதையை ஏற்படுத்தி கொண்டனர். தற்போதைய தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது ஒருவேளை அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் அதிகளவில் வெற்றி கிடைத்து இருக்கும் என்ற பேச்சு எழுந்து உள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மொத்தம் 46.97 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 23.05 சதவீதமும், பா.ஜனதா 18.28 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லி செல்லும் அண்ணாமலை  அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாகவும், தேர்தலில் சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, கட்சி தலைமையிடம் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அண்ணாமலையின் முதல் டெல்லி பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com