

சென்னை,
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான சில முக்கிய அரசாணைகளை, தேர்தல் தேதியை அறிவித்த பிறகும் வெளியிடுவது, முன்பு வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த செயல்பாட்டுக்கு எதிராக தேர்தல் கமிஷனில் குற்றம்சாட்டப்பட்டது. எனவே கடந்த சில தேர்தல்களின்போது. அரசு உயர் அதிகாரிகளுக்கு இதற்காக தனி உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பித்து வருகிறது.
அதன்படி, மாநில அரசு செயல்படும் வரை பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின் பட்டியலில் கோடு போட வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிறப் பிக்கப்படும் அரசாணைகளின் விவரங்களை அந்த கோட்டுக்கு பிறகு சேர்க்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தற்போதும் இதற்கான உத்தரவை அரசு உயர் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் பிறப்பித்திருக்கிறது. மேலும், அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு தலைமை தேர்தல் அதிகாரியை அணுகி ஆலோசிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.