பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும் என அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரொக்கப் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் ஆகியோருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன், 4.1.2026 முதல் 7.1.2026 வரை ரேஷன் கடை பணியாளர்களால் வழங்கப்பட்டது.
நேற்று (12-ந் தேதிவரை) 24 ஆயிரத்து 924 ரேஷன் கடைகளில் உள்ள 2 கோடியே 4 லட்சத்து 10 ஆயிரத்து 899 அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகையாக ரூ.6,123.26 கோடி வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் இன்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் (புதன்கிழமை) வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி விடுபட்டவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.






