கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை வெட்டிக்கொன்ற வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கைது


கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை வெட்டிக்கொன்ற வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கைது
x

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை வெட்டிக்கொன்ற வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ராஜேந்திரன். இவருக்கு தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி திரேஸ்நகரைச் சேர்ந்த ராமசுப்பு மனைவி சக்தி மகேஸ்வரியுடன் (வயது 37) பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் ராஜேந்திரனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

சக்திமகேஸ்வரியின் கணவர் ராமசுப்பு கர்நாடகாவில் தங்கி வேலை பார்த்ததால் சக்திமகேஸ்வரி- ராஜேந்திரனின் கள்ளக்காதல் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. தாய் பிரிந்ததாலும், ஊரில் ராஜேந்திரன்- சக்தி மகேஸ்வரியின் கள்ளக்காதலால் குடும்பத்தில் அவப் பெயர் ஏற்படுவதாலும், இந்த உறவை கைவிடும்படி ஏட்டு ராஜேந்திரனின் 16 வயது மகன், சக்திமகேஸ்வரியை சந்தித்து வலியுறுத்தியுள்ளான். ஆனால் அவர் கேட்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த ஏட்டு மகன் மற்றும் அவரது நண்பரான மற்றொரு 16 வயது சிறுவனும் கடந்த 15-ந்தேதி சக்தி மகேஸ்வரி வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி, ஏட்டு ராஜேந்திரன் மகன் மற்றும் அவரது நண்பரான மற்றொரு சிறுவனையும் கைது செய்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று ஏட்டு மகனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவிய அவரது மற்றொரு நண்பரும் கைது செய்யப்பட்டார். அவரும் இளஞ்சிறார் ஆவார். அவரது மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story