

சென்னை,
சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் அமைந்திருக்கும் சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அந்த பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த மாதம் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கும், ஒரு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே இவர் மீதான முதல் போக்சோ வழக்கில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போக்சோ வழக்குகளுக்கான குற்றப்பத்திரிக்கையும் முடியும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பாதிக்கப்பட்ட, அந்த பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது 5-வது போக்சோ வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் சிவசங்கர் பாபா மீது 5 போக்சோ வழக்குகள், ஒரு பெண் வன்கொடுமை வழக்கு என மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.