எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: அண்ணாமலை வரவேற்பு

முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.
எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: அண்ணாமலை வரவேற்பு
Published on

வி தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தி.மு.க. முன்னாள் அமைச்சர் எவ வேலு வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய பிற இடங்களில் நேற்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சோதனை நடத்தியது.

முந்தைய தி.மு.க. ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க த.வெ.க. அரசு எடுத்துள்ள முயற்சிகளை நான் வரவேற்கிறேன். இந்த வழக்குகளை த.வெ.க. அரசு விரைவாக முடித்து, குற்றவாளிகள் என நிரூபிக்கப்படுபவர்கள் மீது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

இந்த விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிச்சத்துக்கு வந்த பின்வரும் ஊழல்களையும் த.வெ.க. அரசு விசாரித்து, உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு, அதற்கேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆரம்பமாக சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.

பிஜிஆர் எனர்ஜி ஊழல் – விதிமுறைகளை மீறி மீண்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பின்னர் அது வெளிச்சத்துக்கு வந்த பிறகு ரத்து செய்யப்பட்ட விவகாரம்.

ஊட்டச்சத்து கிட் ஊழல் – ஆவின் நிறுவனம் தயாரிக்க முன்வந்த போதிலும், தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலையில் சத்துமாவு கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம்.

பொங்கல் வேட்டி ஊழல் – பருத்திக்குப் பதிலாக அதிக அளவு பாலியஸ்டர் பயன்படுத்தப்பட்டது; இதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம்

மாநில போக்குவரத்துத் துறையில் பல்வேறு ஊழல்கள் – ரெப்ளக்டிங் மற்றும் பின்புற அடையாள பலகைகள் கொள்முதல் உள்ளிட்ட பல விவகாரங்கள்.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் ஊழல் – பூச்சிக்கொல்லி மருந்துகள் கொள்முதல்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊழல்.

நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு மர்மத்திற்கும் த.வெ.க. அரசு நேரம் ஒதுக்கி தீர்வு காணும் என்று நாங்கள் நம்புகிறோம். பல ஆண்டுகளாக, உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றமும், நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனமும் ஒரே முகவரியில் செயல்பட்டது என்பது குறித்தும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய் பயணத்திற்குப் பிறகு, நோபல் ஸ்டீல்ஸ் தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது குறித்தும் நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். அந்த முதலீடு இன்னும் அறிவிப்பாகவே உள்ளது; அது வேறொரு நாளுக்கான விவாதம்” என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com