

சென்னை,
தவெக நிர்வாகி அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
திருப்பூரில் வங்கதேசத்தைச் சேர்ந்த 6 பேர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலை குறித்துப் பெரும் அதிர்ச்சியையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
ஒரு மாநிலத்தின் உளவுத்துறை என்பது அந்த மாநிலத்தின் கண்கள் போன்றது. ஆனால், டெல்லி போலீசார் வந்து திருப்பூரில் அதிரடி வேட்டை நடத்தும் வரை, தமிழக காவல்துறைக்கும் மாநில உளவுப்பிரிவுக்கும் இது குறித்த எந்தத் தகவலும் தெரியாமல் போனது நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது. திருப்பூர் போன்ற ஒரு பரபரப்பான தொழில் நகரத்தில், வெளிநாட்டினர் போலி ஆதார் கார்டுகளைப் பயன்படுத்தி நீண்டகாலமாகத் தங்கியிருந்து, உளவு வேலைகளில் ஈடுபட்டிருப்பது ஆளுங்கட்சியின் மெத்தனப் போக்கிற்குச் சான்றாகும்.
தமிழகத்தை 'அமைதிப் பூங்கா' என்று மேடைக்கு மேடை முழங்கும் ஆளுங்கட்சி, சமூக விரோத சக்திகள் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்கள் மாநிலத்திற்குள் ஊடுருவுவதைத் தடுக்கத் தவறிவிட்டது. வெளிநாட்டினர் மிக எளிதாகப் போலி ஆவணங்களைப் பெற்று இங்கு குடியேறுவது, அரசு இயந்திரத்தின் மீதான பிடி தளர்ந்துள்ளதைக் காட்டுகிறது.
உளவுத்துறையை அரசியல் பழிவாங்கல்களுக்குப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மாநிலத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதில் ஆளுங்கட்சி கவனம் செலுத்த வேண்டும். அந்நியச் சக்திகள் தமிழக மண்ணைப் புகலிடமாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது. டெல்லி போலீசார் தலையிட்டுச் செயல்படும் வரை உள்ளூர் நிர்வாகம் அமைதி காத்தது ஏன் என்ற கேள்விக்கு அரசு பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.