மனைப்பிரிவு திட்டங்களுக்கு 30 நாட்களில் அனுமதி - மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை

தமிழகத்தில் புதிதாக செயல்படுத்தப்படும் மனைப்பிரிவு திட்டங்களுக்கு 30 நாட்களில் அனுமதி வழங்க, மாநகராட்சிகள் சார்பில் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மனைப்பிரிவு திட்டங்களுக்கு 30 நாட்களில் அனுமதி - மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை
Published on

சென்னை,

தமிழகத்தில் கட்டுமான திட்டங்கள் போன்று, மனைப்பிரிவு திட்டங்களுக்கு, விரைவாக ஒப்புதல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதிய மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்த, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி.,யில் விண்ணப்பிக்கின்றன. அவற்றை பரிசீலித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில், அதிக தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுகின்றன.

புதிய மனைப்பிரிவு திட்டங்களை பொறுத்தவரை, அடிப்படை விவரங்களை ஆய்வு செய்து, டி.டி.சி.பி., தொழில்நுட்ப அனுமதி வழங்கும். இதன் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள் முறையான, இறுதி ஒப்புதலை அளிக்க வேண்டும். இதற்காக வரும் மனுக்கள் மீது, விரைவாக நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகங்கள், சில வழி காட்டுதல்களை வழங்கி உள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது;-

* டி.டி.சி.பி., தொழில் நுட்ப அனுமதி வழங்கியதும், ஓ.எஸ்.ஆர்., நிலதான ஒப்படைப்புக்கான, பத்திரத்துடன், விண்ணப்பதாரர் மாநகராட்சியை அணுக வேண்டும்

* மனைப்பிரிவில் அடிப்படை வசதிகள் பராமரிப்புக்கு, ஒரு லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக பெற வேண்டும்.

* மனைப்பிரிவு ஒப்புதல் தொடர்பான அனைத்து பணிகளையும், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்

* அடிப்படை வசதிகளுக்கான முழுத் தொகையையும், மனுதாரர் செலுத்தும் நிலையில், 30 நாட்களுக்குள் இறுதி ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்

* மனுதாரரே அடிப்படை வசதி பணிகளை மேற்கொள்ளும் நிலையில், 60 நாட்களுக்குள் மனைப்பிரிவு ஒப்புதல் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com