

சென்னை,
புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ரூ.8.8 கோடி லட்சம் மதிப்பில் மொத்தம் 6 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் மதுரையில் உள்ள விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில்,
மதுரை விமான நிலையத்தை பெயரளவில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்திய பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பான என் மனமார்ந்த நன்றிகள். இதனால் தென் தமிழகத்தின் வளர்ச்சி புதிய மயில் கல்லை தொடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என அதில் கூறியுள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ள பிரதமர் மோடிக்கும் மத்திய அமைச்சரவைக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இந்த முன்னெடுப்பானது மதுரை மக்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே பெருமையான அடையாளமாக திகழப்போகிறது என்பதில் எள்லவும் ஐயமில்லை என கூறியுள்ளார்.