ஏ.ஆர்.ரஹ்மான் வெறுப்பை அல்ல, மரியாதையையும் நன்றியையும் பெறத் தகுதியானவர்: கனிமொழி எம்.பி.

நாட்டின் இசையை உலகளாவிய மேடைகளுக்கு எடுத்துச் சென்றவர் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
சென்னை,
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், “கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. சினிமாத்துறை சமூகம் சார்பானதாக மாறி விட்டது. திரைத்துறையில் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்களே, அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியுடன் இருக்கின்றனர். இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கலாம்," என்று தெரிவித்தார்.
ஏ.ஆர்.ரகுமானின் இந்த கருத்துக்கு பலரும் எதிர் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக எம்.பி.கனிமொழி ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“நான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக நிற்கிறேன். மதம், மொழி, அடையாளம் ஆகியவற்றைத் தாண்டி கலையை உருவாக்கும் ஒரு இசைக் கலைஞரை திட்டமிட்டு குறிவைப்பதும், அதே நேரத்தில் இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிர்ச்சியூட்டும் மௌனமும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. ரஹ்மான் ஒரு படைப்பாளியும், உயரிய கலைஞரும் ஆவார்.
இந்த நாட்டின் இசையை உலகளாவிய மேடைகளுக்கு எடுத்துச் சென்றவர். மேலும் இந்தியாவின் முதன்மை கலாச்சாரத் தூதராகவும், இந்திய விழுமியங்களின் பிரதிநிதியாகவும் திகழ்கிறார். அவர் பாரபட்சத்தையும் வெறுப்பையும் அல்ல, மரியாதையையும் நன்றியையும் பெறத் தகுதியானவர். இத்தகைய சகிப்பின்மைக்கு ஒரு ஜனநாயக மற்றும் பன்மைத்துவ சமூகத்தில் இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.






