

சென்னை
எல்-நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய, கிழக்கு பசிபிப் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிக வெப்பமடையும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வு எல்- நினோ என்று அழைக்கப்படுகிறது. இது மழைப் பொழிவு, வெப்ப நிலை முறைகளை மாற்றி, குறிப்பிட்ட பகுதிகளில் கடுமையான வறட்சியையும், இதர பகுதிகளில் பெருமழையையும் உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
பசுபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 28 செல்சியஸ் டிகிரியாக இருக்கும். இந்த வெப்ப நிலையில் இருந்து 0.5 கூடினால் எல் நினோ உருவானதாக அர்த்தம். தற்போது பசுபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளன. அடையாளக் குறியீடு 28 செல்சியஸ் டிகிரியில் இருந்து 0.5 அதிகரித்துள்ளன.
ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை காலாண்டில் மிதமான முதல் வலுவான எல்நினோ நிலையை காட்டுகின்றன. தற்போதைய ஆய்வுகள் மற்றும் கணிப்புகள் இந்த ஆண்டு கடைசியில் எல் நினோ வலுப்பட வாய்ப்பு உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பாகவே உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து நிலவரங்களை கண்காணித்து வருவதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் எல்-நினோ தாக்கத்தால் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறுகிய காலப் பயிர்களைப் பரிந்துரைக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
இதன்படி அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு மாவட்டங்களில் எள், பயறு வகைகள் போன்ற குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.