புரட்சி தளபதி விஜய் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? - செங்கோட்டையனை சாடிய கே.பி.முனுசாமி

விஜய்யுடன் சேர்ந்தவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்று கே.பி.முனுசாமி கூறினார்.
புரட்சி தளபதி விஜய் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? - செங்கோட்டையனை சாடிய கே.பி.முனுசாமி
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது:-

தி.மு.க. தீய கட்சி, த.வெ.க. தூய்மையான கட்சி என்று விஜய் பேசுகிறார். த.வெ.க. எப்படி தூய்மையான கட்சியாக இருக்க முடியும். அவர்கள் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை, எப்படி திட்டங்கள் கொண்டு வருவார்கள் என்று தெரியாது. அப்படி திட்டம் கொண்டு வந்தால் அதை ஒழுக்கமாக எவ்வாறு நிறைவேற்றுவார்கள் என்று சொல்ல முடியாது.

விஜய் கட்சி ஆரம்பிக்கும்போது தன்னுடைய ரசிகர்களுடன் ஆரம்பித்தார். அத்துடன் இருந்திருந்தால் ஒரு தனித்தன்மை உள்ள கட்சி என்று கூறி இருக்கலாம். ஆனால் தற்போது பல்வேறு கட்சிகளில் இருந்து உங்களுடன் வந்துள்ளார்கள். அவ்வாறு வந்துள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள். எங்கு வசதியான தலைமை பொறுப்பு கிடைக்கும், அடுத்த தேர்தலில் எப்படி நாம் பதவிக்கு வரலாம் என்று நினைப்பவர்கள் தான் விஜய் உடன் சேர்ந்துள்ளார்கள்.

அ.தி.மு.க.வில் உடனடியாக பதவி கிடைக்காது. உழைப்பவருக்கான கட்சி இது. அதனால்தான் கிராமப்புறத்தில் இருந்த சாதாரண எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார். இங்கு இருப்பவர்கள் எல்லாம் உழைப்பவர்கள். ஆனால் அங்கு சென்று இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள்.

அதுபோல்தான் இங்கிருந்து செங்கோட்டையன் அங்கு சென்றுள்ளார். செங்கோட்டையன் 53 ஆண்டுகள் அ.தி.மு.க.வில் இருந்து எல்லா பதவி சுகத்தையும் அனுபவித்து கொண்டார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்து புரட்சி தளபதி விஜய் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? இப்படிப்பட்ட கலவையான மக்கள் தான் அந்த கட்சியில் இருக்கிறார்கள். அது தூய்மை கட்சி இல்லை. கலப்பட கட்சி. ஏன் கலப்பட கட்சி என்றால் இங்கிருந்து செங்கோட்டையன் சென்றுள்ளார்.

எங்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சுற்றுகிற கூட்டம் விஜய்யுடன் வந்துள்ளது. விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாளை உங்களையும் காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு சென்று விடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com