வெளிநாட்டில் உள்ள கணவரிடம் வீடியோ காலில் பேசியபோது தகராறு; இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வெளிநாட்டில் உள்ள கணவருடன் வீடியோ காலில் பேசியபோது ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளிநாட்டில் உள்ள கணவரிடம் வீடியோ காலில் பேசியபோது தகராறு; இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கன்னியாகுமரி,

குமரி மாவட்டம் பெரியவிளையை சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மனைவி ஞான பாக்கியபாய் (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஞான பாக்கியபாய் கொட்டாரம் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் பரப்புரையாளராக பணியாற்றி வந்தார்.

வெளிநாட்டில் உள்ள கணவரிடம் ஞானபாக்கியபாய் அடிக்கடி செல்போனில் வீடியோ கால் மூலம் பேசுவது வழக்கம்.

வீடியோ காலில் தகராறு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஞான பாக்கியபாய் வீடியோ கால் மூலம் கணவரிடம் பேசியுள்ளார். அப்போது திடீரென அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதனால் கோபமடைந்த ஞான பாக்கியபாய் உடனே செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். பின்னர் செந்தில், மனைவியிடம் பேச மீண்டும், மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் எடுத்து பேசாததால் பதற்றமடைந்த செந்தில் பக்கத்து வீட்டில் உள்ள உறவினர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை கூறியுள்ளார்.

தற்கொலை

உடனே அவர்கள் ஞான பாக்கியபாய் வீட்டுக்கு சென்றனர். அங்கு கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால், உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது ஞானபாக்கியபாய் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீடியோ காலில் கணவரிடம் பேசியபோது ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com