

அரியலூர்,
அரியலூர் மாவட்டத்துக்கு, வருகின்ற ஆக.10-ந் தேதி திங்கள்கிழமை ஆடி திருவாதிரை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப்புகழ் வாய்ந்த ஒன்றாகும். அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமர்சையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆக.10-ந் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு ஆகஸ்ட் 22-ந்தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.