

அரியலூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா (வயது17). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி இறந்து விட்டார். இதனால் சரண்யா என்பவரை முருகானந்தம் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
லாவண்யா தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் படித்து வந்தார். பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டாய மதமாற்றம் புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.
இதனிடையே, விஷம் குடித்த மாணவி லாவண்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் பேசிய மற்றொரு வீடியோ இன்று வெளியானது. அந்த வீடியோவில், குடும்ப சூழ்நிலையால் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், அங்கு உள்ள சிஸ்டர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும் கூறினார்.
அதிக வேலை வாங்கியதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்ததாகவும், அதனால், இப்படியே பொய்க்கொண்டிருந்தால் சரியாக படிக்க முடியாது என நினைத்து தான் விஷம் குடித்ததாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் அரியலூர் தற்கொலை விவகாரம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணை தொடர்பான அறிக்கை இன்று வெளியானது.
அந்த அறிக்கையில், தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் மதம் சார்பான பிரச்சாரங்கள் பள்ளியில் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;-
மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பள்ளியாக இருந்தாலும் கூட அங்கு இந்து மதத்தை சேர்ந்த மாணவர்கள் தான் அங்கு அதிக அளவில் படிக்கின்றனர்.
அப்பள்ளியில் 5 ஆயிரத்து 570 இந்து மத மாணவர்களும், 2 ஆயிரத்து 290 கிறிஸ்தவ மத மாணவர்களும், 179 இஸ்லாமிய மத மாணவர்களும் பயின்று வருகின்றனர்.
தொடர்ச்சியாக மாவட்டத்தில் இருக்கக்கூடிய கல்வி அதிகாரிகள் பல்வேறு காலகட்டங்களில் அந்த பள்ளியில் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது, மாணவர்களிடம் உரையாடியபோது எந்தஒரு தருணத்திலும் கட்டாய மதமாற்றம் தொடர்பான பிரச்சினைகள் பள்ளி நிர்வாகத்தில் இருந்து இருந்ததாக எந்த ஒரு முறையும் புகாரும் பெறப்படவில்லை. அதுபோன்ற சம்பவங்களும் நடைபெறவில்லை.
மத மாற்ற பிரசாரம் அதுபோன்ற சம்பவங்களும் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவில்லை என்பதை இந்த விசாரணையின் மூலம் உறுதி செய்வதாக மாவட்ட கல்வி அலுவலர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யாவுக்கு தனிப்பட்ட முறையில் குடும்ப ரீதியில் பிரச்சினை இருக்கலாம். அவரது சித்தி சரண்யாயின் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்திருக்கலாம். அது தொடர்பாகவும் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
மதம் சார்பான பிரசாரங்கள் பள்ளியில் செய்யப்படவில்லை. மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணம் கிடையாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.