ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு நடைபெறும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய கலெக்டர் அறிவுறுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
Published on

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு நடைபெறும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 24-ந் தேதி நடைபெறும் குரூப்-4 தேர்வில் 34 ஆயிரத்து 378 தேர்வாளர்கள் தேர்வு எழுத உள்ளனர். 99 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த மையங்களுக்கு தலா ஒரு வீடியோகிராபர் மற்றும் அரக்கோணம், வாலாஜா, சோளிங்கர், ஆற்காடு சார் கருவூல அலுவலகங்களில் தலா ஒரு வீடியோகிராபர் ஆக மொத்தம் 121 நபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 117 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ்

தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கருவூல அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாரை நியமிக்க வேண்டும். மின் தடை ஏதும் இல்லாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்வாளர்களுக்கு வசதியாக பஸ்களை இயக்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதாரத்துறை, நகராட்சி துறைதுறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் தங்கள் வட்டங்களில் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com