ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தள்ளிவைப்பு

ஜாமீன் கோரிய வழக்கு தொடர்பான விசாரணையை வரும் 10-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
புதுடெல்லி,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த கொலை வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் 24-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விரைந்து விசாரிக்க முன்வைத்த கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வருகிற 10-ந்தேதி விசாரணைக்கு வழக்கை பட்டியலிட உத்தரவிட்டார்.
இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு பிறகு முடிவெடுக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை அக்டோபர் 10-ந்தேதிக்கு(நாளை) தள்ளிவைத்தார்.






