நாமக்கல்லில்அறநிலையத்துறை அலுவலகத்தை பூட்ட முயன்ற பா.ஜ.க.வினர் 138 பேர் கைது

நாமக்கல்லில்அறநிலையத்துறை அலுவலகத்தை பூட்ட முயன்ற பா.ஜ.க.வினர் 138 பேர் கைது
Published on

நாமக்கல்லில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற பா.ஜ.க.வினர் 138 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூட்டு போட முயற்சி

தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் சனாதனத்தை ஒழிப்போம் என பொதுவெளியில் அமைச்சர் உதயநிதி பேசியதாகவும், இதனை கண்டிக்காத அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பா.ஜ.க.வினர் தெரிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜனதா ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். எனினும் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போட பா.ஜ.க.வினர் முயன்றனர். மேலும் அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.

138 பேர் கைது

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, நகர தலைவர்கள் சரவணன், வேலு மற்றும் 17 பெண்கள் உள்பட 138 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com