ஓசூர் அருகேகாரில் 207 கிலோ குட்கா கடத்திய 2 பேர் கைது

ஓசூர் அருகேகாரில் 207 கிலோ குட்கா கடத்திய 2 பேர் கைது
Published on

ஓசூர்:

ஓசூர் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பட்டு மற்றும் போலீசார் சிப்காட் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 207 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான்பராக், பான்மசாலா உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 900 ஆகும். இதையடுத்து காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து காரில் வந்த 2 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மதுரை வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த முனிராஜ் (வயது 28), மதுரை ஆரப்பாளையம் மேல் பொன்னகரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (26) என்பது தெரியவந்தது.

பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு குட்கா கடத்த முயன்றது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com