சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: கோர்ட்டு அதிரடி

துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை15-ம் தேதி அமல்படுத்த காவல்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தி.மு.க.வின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருப்பவர் துரைமுருகன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்த சூழலில் கடந்த 1996-2001ம் ஆண்டு வரை நடைபெற்ற கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் செயல்பட்டு வந்தார்.
அந்த காலக்கட்டத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு மீறி அதிக சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அதன்பிறகு அமைந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள், சகோதரர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பாய்ந்தது.
அவர்களிடம் தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான வழக்கு வேலூர் முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் துரை முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பு கடந்த 2007 ம் தேதி வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
துரைமுருகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களின் சொத்துக்களையும் சேர்த்து தான் அமைச்சர் துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது தவறான ஒன்றாகும் என்று வாதிட்டன. அதேபோல் அரசு தரப்பிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கலான குற்றப்பத்திரிகை அடிப்படையில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட ஐகோர்ட்டு, சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவின்கீழ், துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக விசாரணையை துவங்கி, ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் சிறப்பு கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி இருவரும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து துரைமுருகனின் மனைவி நேரில் ஆஜராகி பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரினார். இதனை தொடர்ந்து அவரது பிடிவாரண்ட்டை கோர்ட்டு ரத்துசெய்தது.
ஆனால் துரைமுருகன் இன்று ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிரான பிடிவாரண்ட்டை வருகிற 15-ம் தேதி அமல்படுத்த காவல்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 15-ந் தேதிக்குள் துரைமுருகன் நேரில் ஆஜராகவில்லை என்றால், அவர் கைதுசெய்யப்படும் சூழலுக்கு தள்ளப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.






