

சென்னையை அடுத்த மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடுகளுக்கு சென்று முகவரி கேட்பது போல் நடித்து தனியாக இருக்கும் வயதான பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவம் நடப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரூபன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மடிப்பாக்கத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றிய ஆலந்தூர் ஆசர்கானா பகுதியை சேர்ந்த குலாப்பாஷா (வயது 39) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதிகளில் முகவரி கேட்பது போலவும், சிலிண்டர் சர்வீஸ் செய்வது போலவும் நடித்து வீடுகளில் தனியாக இருக்கும் வயதான பெண்களிடம் சங்கிலி பறித்து சென்றது தெரியவந்தது.
குலாப் பாஷாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 8 பவுன் தங்க நகைகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.