

திருவாதிரை திருவிழா
பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீசுவரர் கோவிலில் 40-வது ஆண்டு திருவாதிரை திருவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி இரவு 10 மணிக்கு நடராஜபெருமானுக்கு அபிஷேகம் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் நடராஜா பெருமான்-சிவகாமி அம்பாள் ஆருத்ரா தரிசன உற்சவமும், சுவாமி திருவீதியுலாவும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் நகர சோழிய வேளாளர் சமூகத்தினர் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் செய்துள்ளனர்.
ஆருத்ரா தரிசன ஊர்வலம்
இதேபோல் பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள புகழ்பெற்ற தர்மசம்வர்தினி சமேத பஞ்சநந்தீஸ்வரர் கோவிலில் திருவாதிரை மற்றும் ஆருத்ரா தரிசனவிழாவையொட்டி இன்று காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் அம்பாள், சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேசுவரர், சோமாஸ்கந்தருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு பஞ்சநந்தீஸ்வரர்- தர்மசம்வர்தினி அம்பாளுக்கு 8-வது ஆண்டு திருக்கல்யாண மகாஉற்சவமும் நடக்கிறது.
ஆருத்ரா தரிசன உற்சவத்தையொட்டி நாளை காலை 10 மணிக்கு சோடச அபிஷேகங்களும், மாலை 5 மணிக்கு ஆருத்ரா தரிசன ஊர்வலமும் நடக்கிறது.