ஆறுபடைவீடு பாதயாத்திரை வழிபாடு

தஞ்சையில் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாட்டில் ஏராளமான பெண்கள், முருகன் படத்துடன் ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆறுபடைவீடு பாதயாத்திரை வழிபாடு
Published on

தஞ்சையில் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாட்டில் ஏராளமான பெண்கள், முருகன் படத்துடன் ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சையில் ஆறுபடைவீடு

திருப்புகழில் குறிப்பிடப்படும் முருகப்பெருமானின் ஆறுபடைகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து உள்ளாரோ? அதே போல் தஞ்சை நகரில் உள்ள 6 கோவில்களில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வரும் வகையில் தஞ்சையில் ஆண்டுதோறும் வெற்றிவேல் முருகன் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாடு நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு 45-வது ஆண்டாக வெற்றிவேல் முருகன் ஆறுபடை வீடு பாதயாத்திரை குழுவினர் தஞ்சை பெரியகோவிலில் இருந்து நேற்று காலை புறப்பட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு முருகன் படத்துடன், பாடல்களை பாடியபடி சென்றனர். முதலில் இந்த பாதயாத்திரை குழுவினர் மேலஅலங்கத்தில் உள்ள முருகன்கோவிலுக்கு (திருப்பரங்குன்றம்) சென்றனர்.

பாதயாத்திரை வழிபாடு

தொடர்ந்து வடக்கு அலங்கம் முருகன் கோவில் (பழமுதிர்ச்சோலை), குறிச்சி தெரு முருகன் கோவில் (திருத்தணி), தஞ்சை ஆட்டுமந்தைத்தெரு முருகன்கோவில் (சுவாமிமலை), சின்ன அரிசிக்காரத்தெரு முருகன் கோவில் (பழனி) ஆகிய கோவில்களுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் சென்றனர். இறுதியாக தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு (திருச்செந்தூர்) பக்தர்கள் சென்றனர்.

பாதயாத்திரையின் போது 6 கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆறுபடை முருகனையும் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் தஞ்சை பெரியகோவிலில் பாதயாத்திரை நிறைவடைந்தது. இதையடுத்து பெரியகோவிலில் உள்ள முருகன் சன்னதியில் சிறப்புவழிபாடு நடைபெற்றது. பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, தண்ணீர் பாக்கெட், டீ போன்றவை வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com