

சென்னை,
சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு அரசு பிளீடர் பதவி கடந்த ஆண்டு காலியானது. இதையடுத்து, பொறுப்பு அரசு பிளீடராக வி.ஜெயபிரகாஷ் நாராயணன் என்பவர் நியமிக்கப்பட்டார். தற்போது, அந்த பதவிக்கு அவரை நிரந்தரமாக நியமித்து தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளை, அரசு வக்கீல்கள் நியமனம் விதிகள் 2017-ன் கீழ், அரசு பிளீடர் பதவிக்கு தகுந்த நபரை தேர்வு செய்ய ஒரு தேர்வு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல வக்கீல்களிடம் விண்ணப்பத்தை பெற்று, கடந்த ஏப்ரல் 29-ந்தேதி பரிசீலித்தது. பின்னர் அந்த குழு செய்த பரிந்துரையின் அடிப்படையில், அரசு பிளீடர் பதவிக்கு வி.ஜெயபிரகாஷ் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அரசு பிளீடராக வி.ஜெயபிரகாஷ் நாராயணன் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
அரசு பிளீடராக நியமிக்கப்பட்டுள்ள வி.ஜெயபிரகாஷ் திருவண்ணாமலை மாவட்டம், பேராயம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்.